பொள்ளாச்சி சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வந்துள்ளது. பழனிசாமியின் அ.தி.மு.க. ஆட்சி மறைக்க நினைத்த குற்றத்திற்கு நீதியான, சரியான தண்டனை தரப்பட்டுவிட்டது.
‘பொல்லாத’ பழனிசாமிக்கு பொள்ளாச்சியே சாட்சி!
பொள்ளாச்சி சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வந்துள்ளது. பழனிசாமியின் அ.தி.மு.க. ஆட்சி மறைக்க நினைத்த குற்றத்திற்கு நீதியான, சரியான தண்டனை தரப்பட்டுவிட்டது.
சபரிராஜனுக்கு 4 ஆயுள் தண்டனை, திருநாவுக்கரசுக்கு 5 ஆயுள் தண்டனை, சதீஷுக்கு 3 ஆயுள் தண்டனை, வசந்தகுமாருக்கு 2 ஆயுள் தண்டனை, மணிவண்ணனுக்கு 5 ஆயுள் தண்டனை, பாபுவுக்கு ஒரு ஆயுள் தண்டனை. ஹெரன்பாலுக்கு 3 ஆயுள் தண்டனை, அருளானந்தத்துக்கு 1 ஆயுள் தண்டனை, அருண்குமாருக்கு 1 ஆயுள் தண்டனை கொடுத்துள்ளார் கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி.
இதில் அருளானந்தம் என்பது அ.தி.மு.க. மாணவரணி செயலாளராக இருந்தார். ஊழல்மணியான வேலுமணியின் கைத்தடியாக வலம் வந்துள்ளார். வேலுமணியுடன் பல்வேறு விழாக்களில் பங்கேற்றுள்ளார். அதேபோல், பொள்ளாச்சி ஜெயராமனுடன் இருக்கிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் ஜெயராமனுடன் இருந்துள்ளார். ஜெயராமன் பேட்டி கொடுக்கும்போதெல்லாம் அவரோடு அருளானந்தம் உள்ளார். அ.தி.மு.க.வின் சுவரொட்டிகளில் அருளானந்தம் படம் இடம்பெற்றுள்ளது. அதேபோல் பாபு, ஹெரன்பால் ஆகிய இருவரும் பொள்ளாச்சி ஆச்சிபட்டி ஊராட்சித் தலைவரும், அ.தி.மு.க. பிரமுகருமான ரெங்கநாதனுடன் நெருக்கமாக இருந்தவர்கள்.
பழனிசாமி முதல்வராகச் சொல்லிக் கொண்டு வலம் வந்த காலத்தில் (2019) பொள்ளாச்சியில் ஒரு மாபெரும் கொடூரம் நடந்தது. ஒரு நாள், இருநாள் அல்ல, பல மாதங்களாக நடந்தது. எல்லாவற்றையும் டி.வி.யில் வந்தால் மட்டுமே தெரிந்து கொள்ளும் பழனிசாமிக்கு பொள்ளாச்சி சம்பவம் டி.வி.யில் வராததால் தெரியவில்லை.
பல மாதங்களாக – பல பெண்களை மிரட்டி – பாலியல் வன்கொடுமை செய்து – அதனை வீடியோவாக பதிவு செய்து – அவர்களை மிரட்டும் செயலை ஒரு கும்பல் செய்து வந்தது. அந்தக் கும்பலில் அ.தி.மு.க. நிர்வாகிகள் இருந்தார்கள். அந்த அ.தி.மு.க. நிர்வாகிகள், அன்றைய அமைச்சர்கள் சிலருக்கு நெருக்கமாகவும் இருந்தார்கள். “ஆட்சி நம்ம ஆட்சி, போலீஸ் நம்ம போலீஸ்” என்ற மிதப்பில் இந்தக் கும்பல் இந்த அட்டூழியத்தைத் தொடர்ந்து செய்து வந்தது. இதை பழனிசாமியின் போலீசும் கண்டுபிடிக்கவில்லை. பழனிசாமி காலத்தில் உளவுத்துறையை பார்த்தவர்களும், கண்டுபிடிக்கவில்லை. பழனிசாமியின் நாற்காலியைக் காப்பாற்றுவதில்தான் அவர்கள் மும்முரமாக இருந்தார்கள்.
பாதிக்கப்பட்ட ஒரு பெண் – இந்தக் கும்பலின் மிரட்டலுக்கு அடிபணியாமல் துணிச்சலாக வெளியில் வந்தார். அ.தி.மு.க. ஆட்சியில் காவல்துறை உயரதிகாரியைச் சந்தித்து புகார் சொன்னார். அவர் அதனை கருத்தில் கொள்ளவில்லை. பின்னர் பொள்ளாச்சி கிழக்கு காவல்நிலையத்துக்குப் போய் புகார் சொன்னார். யார் மீது புகார் சொல்லப்பட்டதோ, அவர்கள் தரப்புக்கே இந்தச் செய்தி போனது. பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணன் தாக்கப்பட்டார். விவகாரம் பெரிதாக ஆனபிறகு வேறு வழியில்லாமல் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிந்தார்கள். சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், திருநாவுக்கரசு ஆகியோர் கைது செய்யப்பட்டார்கள். இதில் சம்பந்தப்பட்ட அ.தி.மு.க. பிரமுகர்கள் காப்பாற்றப்பட்டார்கள்.
அ.தி.மு.க. ஆட்சியில் முறையான நீதி கிடைக்காது என்பதால், ‘சி.பி.ஐ.க்கு மாற்றியாக வேண்டும்’ என்று தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள், அமைப்புகள், கோரிக்கை வைத்தது. சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவு போட்டு, இந்த விவகாரத்தை மறைக்க நினைத்தது அ.தி.மு.க. அரசு. ஆனால் உயர் நீதிமன்றத் தீர்ப்பின் படி சி.பி.ஐ.க்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. அந்த சி.பி.ஐ.யிடம் ஆவணங்களை ஒப்படைக்காமல் காலதாமதம் செய்தார்கள். நீதிமன்றம் கடுமையான உத்தரவுகளை போட்ட பிறகுதான் கொடுத்தார்கள்.
சி.பி.ஐ. இந்த வழக்கை விசாரித்த பிறகு தான் அ.தி.மு.க. பிரமுகர் அருளானந்தம் 2021 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அருளானந்தம், ஹெரன்பால் ஆகியோர் கைது செய்யப்பட்ட பிறகுதான் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டனர். 2019 முதல் 2021 வரை இவர்களை காப்பாற்றி வைத்திருந்தார் பழனிசாமி.
பொள்ளாச்சியில் இந்தக் குற்றச் சம்பவம் லேசாக வெளியில் தெரிய வந்ததுமே அன்றைய முதல்வர் பழனிசாமியிடம் நிருபர்கள் கேட்டார்கள். “இதுக்கெல்லாம் என்ன ஆதாரம் இருக்கிறது? ஆதாரம் இருந்தால் கொடுங்கள், சும்மா யாரும் எதையும் சொல்லலாம்” என்று சொன்னவர்தான் இந்த பழனிசாமி.
இந்த விவகாரத்தில் போலீஸ் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று மிரட்டியவர் அ.தி.மு.க. பிரமுகர் பார் நாகராஜன். அன்றைய அமைச்சர் வேலுமணியின் பேரைச் சொல்லி போலீஸை மிரட்டினார். இந்தத் தகவலை தி.மு.க. தலைவர் அம்பலப்படுத்திய பிறகுதான் பார் நாகராஜனை அ.தி.மு.க.வை விட்டு நீக்கியார்கள். தன்னை கட்சியை விட்டு நீக்கிய மறுநாளே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குப் போய் நின்று கொண்டு துணிச்சலாகப் பேட்டி கொடுத்தார் பார் நாகராஜன். பழனிசாமி ஆட்சியில் பாலியல் குற்றவாளிகள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வாசலில் நின்று பேட்டி கொடுக்கும் அளவில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்தது.
இது குறித்து செய்தி வெளியிட்ட ‘நக்கீரன்’ பதிற்றிகையை ஹரீஸ் என்பவர் மிரட்டினார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயரைச் சொல்லித்தான் ஹரீஸ் மிரட்டினார். அந்தளவுக்கு குற்றவாளிகள் பழனிசாமியின் முதுகுக்குப் பின்னால் பதுங்கி இருந்தார்கள்.
“உண்மைக் குற்றவாளிகளை நாட்டுக்கு அடையாளம் காட்டுவேன், யாரும் தப்ப முடியாது” என்று 4.4.2021 அன்று கோவையில் உரையாற்றிய தி.மு.க. தலைவர் அவர்கள் குறிப்பிட்டார்கள். இதோ, அடையாளம் காட்டி, தண்டனையும் பெற்றுத் தந்து விட்டார்கள். “இந்த வழக்கில் அரசுத் தரப்பில் 48 சாட்சிகள் விசாரிக்கப்பட்டார்கள். பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் பயமின்றி சுதந்திரமாக சாட்சி சொல்லியிருக்கிறார்கள்” என்று சி.பி.ஐ. தரப்பு அரசு வழக்கறிஞர் சுந்தரமோகன் பேட்டி அளித்துள்ளார். இந்த பாதுகாப்பை வழங்கியது தி.மு.க. ஆட்சியே.
“அ.தி.மு.க.வைச் சார்ந்த குற்றவாளிகளைப் பாதுகாக்க முயற்சித்த பழனிசாமிக்கு மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்” என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சொல்லி இருக்கிறார். ‘மானமிருந்தால்’ என்ற சொல்ல்தான் முக்கியமானது!
– முரசொலி தலையங்கம்