“திராவிட மாடல் ஆட்சியை, உலகத்திற்கே வழிகாட்டக்கூடிய ஒரு சிறப்பான ஆட்சியாக நாம் நடத்திக்கொண்டிருக்கிறோம்”
— முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்
சென்னை அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கத்தில், மயிலை தொகுதியின் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் வேலு அவர்களின் இல்லத் திருமணவிழா நடைபெற்றது.
இவ்விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்களும், அரசியல் தலைவர்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
அப்போது, விழா மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்:
“வரலாற்று சிறப்புமிக்க சட்டமன்றக் கூட்டத்தொடர், பல்வேறு அறிவிப்புகளுடனும், தீர்மானங்களுடனும் நிறைவடைந்துள்ளது.
நிறைவு நாளில், நான் இயல்பாக பயன்படுத்திய ‘தவழ்ந்த’ என்ற சொல், எதிர்க்கட்சியினரை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆனால், அதன் காரணம் எனக்கு இப்போதுதான் புரிந்திருக்கிறது.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியே, அவரின் புகழைப்பற்றி பேசும் போது “நான் தவழ்ந்து, தவழ்ந்து வந்து படிப்படியாக முதலமைச்சர் பதவி பெற்றிருக்கிறேன்” என SDPI மாநாட்டில் பேசியிருக்கிறார். இது இப்போது, இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர்களே தாமாக வந்து மாட்டிக்கொண்டுள்ளனர்.
திராவிட மாடல் ஆட்சியை, உலகத்திற்கே வழிகாட்டக்கூடிய ஒரு சிறப்பான ஆட்சியாக நாம் நடத்திக்கொண்டிருக்கிறோம். மக்களுக்கு சிறப்பான திட்டங்களை வகுத்து வருகிறோம். நமக்கு மக்களிடையே இருக்கிற வரவேற்பை பார்த்தால், வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில், 234 தொகுதிகளிலும் வென்றால் கூட ஆச்சரியமில்லை.
நம்மை எதிர்க்கக்கூடியவர்கள், எந்த நிலையில் வந்தாலும் சரி! எந்த கூட்டணி அமைத்துக்கொண்டு வந்தாலும் சரி! ஒரு கை பார்ப்போம் என்ற வகையில்தான் களப்பணியாற்றி வருகிறோம். ஆகவே, வருமான வரித்துறை, CBI, ED என எந்த துறையை வைத்து மிரட்டினாலும் கவலைப்பட அவசியமில்லை. நாம் நெருக்கடிகளை பார்த்தே வளர்ந்தவர்கள்” என்றார்.